
சித்தியவான், மே-13 – ‘வெள்ளை யானைத்’ திட்டம் என சிலர் விமர்சித்தாலும், KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ‘மை கியோஸ்க்’ விற்பனைக் கூடார திட்டம் சிறு வியாபாரிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திட்டமானது, அங்காடி வியாபாரிகள் குறிப்பாக சாலையோரங்களில் முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவோருக்காக, அமைச்சர் ஙா கோர் மிங் சிந்தனையில் உதித்ததாகும்.
அவ்வகையில் கடந்தாண்டு டிசம்பர் வரையில் நாடு முழுவதும் 133 ஊராட்சி மன்றங்களில் 7,243 ‘மை கியோஸ்க்’ கூடாரங்கள் நிறுவப்பட்டு, இதன் மூலம் 7,000 குடும்பங்கள் தங்களின் வருமானத்தைப் பெற உதவியுள்ளன.
இந்நிலையில் பேராக் சித்தியவானிலும் அத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சித்தியவானில் அத்திட்டம் அறிமுகம் கண்டதிலிருந்து, சிறு வியாபாரிகள் பாதுகாப்பாக மற்றும் வசதியாக வியாபாரம் செய்ய வாய்ப்பேற்பட்டுள்ளதோடு, நகரின் அழகையும் கூட்டியுள்ளதாக அஸ்தாகா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் இங் தியென் கூறினார்.
சித்தியவானில் ஒரு கோயில் அருகே திறந்த வெளியில் 10 ‘மை கியோஸ்க்’ கூடாரங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 8 செயல்படத் தொடங்கியுள்ளன.
சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் சங்கம் மேலும் 30 கியோஸ்க் கூடாரங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில்,
வெறும் 100 ரிங்கிட் மாத வாடகையில் வழங்கப்பட்டுள்ள இந்த கியோஸ்க் விற்பனைக் கூடாரங்கள் தங்களின் சுமையைக் குறைத்திருப்பதாக அங்குள்ள சிறு வியாபாரிகள் கூறினர்.
பாதுகாப்பாக இருப்பதோடு வாடிக்கையாகளர்களின் கண்களில் படும் அளவுக்கு வியூகமான இடங்களில் செயல்பட முடிவதற்கு வித்திட்டதற்காக, அமைச்சர் ஙா கோர் மிங்குக்கு அவர்கள் நன்றித் தெரிவித்தனர்.
மக்கள் குறிப்பாக B40 வியாபாரிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ‘மை கியோஸ்க்’ திட்டம் பெரிதும் உதவியுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது