Latestமலேசியா

பெருவில் 5,000 ஆண்டுகள் பழமையான பெண் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

லீமா, ஏப்ரல்-25, தென்னமெரிக்க நாடான பெருவின் கடற்கரையில் பண்டைய கேரல் நாகரீகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்ததாக நம்பப்படும் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்காலக் கட்டத்தில் நகர்ப்புற சமூகத்தில் பெண்கள் வகித்த முக்கிய பங்கை இந்த கண்டுபிடிப்பு பிரதிபலிப்பதாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

லீமாவிலிருந்து வடக்கே பசிஃபிக் கடற்கரையில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேரல், அமெரிக்காவின் பழமையான நகரமாகக் கருதப்படுகிறது.

இது பண்டைய எகிப்திய, சீன மற்றும் சுமேரிய நாகரிகங்களின் சமகால நாகரீகமாகும்.

ஆனால் அந்த நாகரிகங்களைப் போலல்லாமல், கேரல் வெளிப்புற தாக்கம் எதுவுமின்றி தனிமையில் வளர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்பெரோ என்றழைக்கப்படும் இப்புதியக் கண்டுபிடிப்பு தளம், ஒரு காலத்தில் நகர குப்பைக் கிடங்காக இருந்தது.

அப்பெண்ணின் உடல் சுற்றப்பட்ட மற்றும் அடக்கம் செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, அவர் கண்டிப்பாக ஓர் உயர் அந்தஸ்துள்ள வர்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடுமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் பாலிமினோ கூறினார்,

அந்தக் காலத்திலேயே அவரது தோல், முடி மற்றும் நகங்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அப்பெண் 20 முதல் 35 வயதுக்குள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவரது உடல் நீலம் மற்றும் பழுப்பு நிற இறகுகளாலான போர்வையுடன் கண்டெடுக்கப்பட்டது; இது ஒரு கிளி போன்ற அமேசானிய பறவையின் இறகுகளால் செய்யப்பட்ட போர்வையாக இருக்கலாம்.

அதே சமயம் அவரது கல்லறையைச் சுற்றி பிரசாதங்கள், குவளைகள், உலர்ந்த சுரைக்காய் மற்றும் டக்கன் (toucans) பறவையின் அலகுகள் கொண்ட கூடைகளும் இருந்தன.

அவர் அடக்கம் செய்யப்பட்ட தேதியை சரியாகக் கணிக்க முடியவில்லை;

என்றாலும், கேரல் நாகரீகம் கிமு 3,000-திலேயே இருந்திருப்பதால், இது உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!