
பாலிங், ஏப்ரல்-29, நம் SPM மாணவர்களின் வெற்றிக் கதைகளில் அடுத்து இணைகிறார் கெடா பாலிங்கைச் சேர்ந்த அறிவியல் துறை மாணவி சங்கீதா விஜயன்.
வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களும் துன்பங்களும் சாதிக்கத் தடையல்ல என்பதை நிரூபித்து, 9A 1B+ என மிகச் சிறந்த தேர்ச்சியை இவர் பெற்றுள்ளார்.
கெரோ தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவரான சங்கீதா, வாழ்க்கையில் சவாலை எதிர்நோக்கும் B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்; அதுவரை இல்லத்தரசியாக இருந்த மனைவி துளசியம்மாள் மாரப்பன், கணவரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும், மகள் சங்கீதாவை பள்ளிக்குக் கூட்டிச் செல்வதும் வருவதும் விஜயனே.
இந்நிலையில் தாம் கடந்து வந்த கஷ்டங்களையும் சவால்களையும் அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட அனுபவங்களையும் சங்கீதா வணக்கம் மலேசியாவோடு பகிர்ந்துகொண்டார்.
டியூஷன் போன்ற கூடுதல் வகுப்புகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே படித்து இந்த சிறப்புத் தேர்ச்சியை அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து படித்து பரீட்சைக்குத் தயாரான சங்கீதா, வீட்டு நிலைமையால் கவனம் சிதறாமலிருக்க சில வேளைகளில் நூலகத்துக்கும் சென்று படித்துள்ளார்.
கல்வி மட்டுமின்றி பாலிங் வட்டாரத்தில் சிறந்த பேச்சாளராகவும் இவர் விளங்கியுள்ளார்.
இவருக்கு குடும்பத்தாரும் உறவினர்களும் பக்க பலமாக இருந்திருப்பதாகவும் சங்கீதா நினைவுக் கூர்ந்தார்.
SPM என்பது வெறுப் படிப்பு மட்டுமல்ல; இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, மன உறுதி சார்ந்தது என்கிறார் இவர்.
சக மாணவர்களைப் போல் வசதியில்லா விட்டாலும், குடும்பக் கஷ்டங்களுக்கும் மத்தியில் சாதித்துக் காட்டியுளார் சங்கீதா.
சோதனையைச் சாதனையாக்கிய சங்கீதா மாணவச் சமூகத்துக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இவர் போன்று ஏராளமான சங்கீதாக்கள் உருவாக வேண்டுமென்பதே நம் எதிர்பார்ப்பு