
புத்ராஜெயா, ஏப்ரல் 9-நாட்டில் மதம் மற்றும் பண்பாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதலை மேலும் வலுப்படுத்த, ‘மதம் மற்றும் பண்பாட்டைக் கடந்த ஒற்றுமை மேம்பாட்டு பயிற்சித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியா பல்வேறு மத, இன மற்றும் பண்பாட்டு பின்னணிகளை கொண்ட நாடாக இருப்பது, நாட்டின் மிகப்பெரிய பலமாகும் எனக் கூறிய அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், இப்புதியப் பாடத் திட்டம் அரசுத் துறை அதிகாரிகளுக்கான முக்கிய வழிகாட்டி ஆவணமாக பயன்படும் என்றார்.
இது, தனியார் துறை மற்றும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் தொடர்பு முறைகள் மற்றும் சமூகங்களில் நேரடியாக எதிர்கொள்ளப்படும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை பயிற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
புரிதல், மரியாதை, ஏற்றுக்கொள்வது மற்றும் கொண்டாடுதல் என்ற கொள்கைகளை, மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.



