
மலாக்கா, செப்டம்பர் 6 – மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாத இறுதியில் கலைக்கப்படலாமென மாநில முதல்வர் அப்துல் ராவுப் யூசோப் (Ab Rauf Yusoh) தெரிவித்துள்ளார்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் “இரண்டு வெள்ளிக்கிழமைகள்” மட்டுமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் சட்டமன்றம் கலைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மலாக்கா சட்டமன்றத்தை விரைவாகக் கலைத்து மாநிலத் தேர்தலுக்கு வழிவிட வேண்டுமென தேசிய முன்னணி (BN) தலைவர் அஹ்மட் சாஹிட் ஹமிடி (Zahid Hamidi) நேற்று வலியுறுத்தினார். குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மலாக்கா தேர்தலில் BN மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் (PN) இடையிலான புரிந்துணர்வு தொடரும் என்பதற்கான சாத்தியத்தையும் சாஹிட் சுட்டிக்காட்டினார். எனினும், எந்தக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது என்பது சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படுமென அவர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தெரிவித்திருந்தார்.



