
கோலாலம்பூர், பிப்ரவரி-8,
மலேசிய-இந்திய உறவுகள் தற்போது வரலாற்று உச்சத்தில் இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்வில் உரையாற்றிய அன்வார், ‘மோடி தனது நெருங்கிய நண்பர்’ எனக் குறிப்பிட்டதோடு, தலைவர்களின் தனிப்பட்ட நட்பு இரு நாடுகளுக்கும் நடைமுறை முன்னேற்றமாக மாறி வருவதாகக் கூறினார்.
மலேசிய-இந்திய வர்த்தகம் கடந்தாண்டு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம், முதலீடு, மற்றும் தொழிலாளர் தருவிப்பு போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது.
பொருளாதாரத்தைத் தாண்டி, சுற்றுலாவும் வளர்ச்சி அடைகிறது.
இந்தியப் பிரஜைகள், மலேசியாவுக்கு வரும் முக்கிய சுற்றுப்பயணிகளில் ஒன்றாக உள்ளனர்.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இந்திய சுற்றுப் பயணிகள் மலேசியாவின் கலாச்சாரம், உணவு, மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க வருகிறார்கள்.
இப்படி உறவுகள் வலுப்பெறுவதால் பயண வசதிகள் எளிதாகி, சுற்றுலா வருமானம் உயரும் என்றும் மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் மேலும் செழிக்கும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
ஸ்ரீ கெம்பாங்கானில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற Selamat Datang Modi Ji எனும் நிகழ்வில் பேசியபோது அன்வார் அவ்வாறுக் கூறினார்.
மோடியின் இரு-நாள் மலேசியப் பயணம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.
தலைவர்களின் நட்பும், மக்களின் இணைப்பும் வலுப்பெறும் நிலையில், மலேசிய–இந்திய உறவுகள் வர்த்தகம், சுற்றுலா, மற்றும்
கலாச்சார பரிமாற்றத்திலும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



