
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா ஏற்பாட்டில், CUMIG எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் சங்கம், DSK குழுமம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில், பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில், ஆலயக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
‘தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்: கோவில்களுக்கான நிலம் உரிமை” என்றப் பெயரில் எதிர்வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி இக்கருத்தரங்கு இடம்பெறுகிறது.
ஆலய நிர்வாகம், நில உரிமை மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் இதில் இடம்பெறும் என, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேசிய நிலச் சட்டம் மற்றும் நகரத் திட்டமிடல் சட்டம் பற்றிய தெளிவான உரைகள் வழங்கப்படுவதோடு, ஆலயங்களுக்குத் தேவையான சரியான ஆவணங்கள் குறித்து வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
தவிர, ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும் என்றார் அவர்.
காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கை, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தொடங்கி வைக்கிறார்.
அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படுவதாகவும் சிவகுமார் அறிவித்தார்.
சட்ட விழிப்புணர்வுடன், ஒழுங்கான ஆவணங்களுடன், பாதுகாப்பான வளர்ச்சிக்காக ஆலய நிர்வாகங்களை வழிநடத்தும் முக்கிய முன்னெடுப்பாக இக்கருத்தரங்கு விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



