
பத்து மலை, ஏப்ரல்-11 – மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமா மற்றும் DSK குழுமத்தின் இணை ஏற்பாட்டிலான தேசிய ஆலயக் கருத்தரங்கம் இன்று சிலாங்கூர் பத்து மலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
முன்னதாக, அவருக்கும், CUMIG எனப்படும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஆர். தனசேகருக்கும், மஹிமா மற்றும் DSK குழுமத் தலைவர் டத்தோ என். சிவகுமார், பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
கருத்தரங்கின் முக்கிய அம்சமாக, ஆலய நிலம் மற்றும் சட்டங்கள் தொடர்பான விளக்கவுரைகள் இடம்பெற்றன.
குறிப்பாக தேசிய நிலச் சட்டம் மற்றும் நகரத் திட்டமிடல் சட்டம் பற்றிய தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஆலயங்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்பட்டதுடன், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கின் நோக்கம், ஆலய நில உரிமை மற்றும் சட்டங்களை மக்களுக்கு விளக்கி, நிர்வாகத்தை சரியான முறையில் வழிநடத்துவதோடு, ஆவணங்களின் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளை குறைப்பதாகும்.
கருத்தரங்க முடிவில், தான் ஸ்ரீ நடராஜா மற்றும் டத்தோ சிவகுமார் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
நிலப் பிரச்னை உட்பட ஆலயம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அண்மையக் காலமாக சர்ச்சையாகி வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக, பங்கேற்பாளர்கள் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.
நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை இதுபோன்ற கருத்தரங்குகள் ஏற்படுத்தும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்.



