
கோலாலம்பூர், பிப் 20 -சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள மாநில அளவிலான நுழைவுத் தடைகள், கடப்பிதழ் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நபரின் உரிமையைப் பாதிக்காது என்று குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
அதே வேளையில், ஒரு விண்ணப்பதாரர் பயணத் தடைக்கு உட்பட்டிருந்து, கண்காணிப்பு அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட நிர்வாக உத்தரவுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கடப்பிதழ் புதுப்பிப்பது தடுக்கப்படலாம். சுபாங் ஜெயா குடியிருப்பாளர் ஒருவர் சரவாக்கில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதால், கடப்பிதழை புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து குடிநுழைவுத்துறை இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளது.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் தன்னாட்சி குடியேற்ற அதிகாரங்கள், மக்களின் கடப்பிதழ்களைப் புதுப்பிப்பதைத் தடுக்காது என குடிநுழைவுத்துறை வலியுறுத்தியது.
எனினும் விண்ணப்பதாரர் சில பதிவுகள் அல்லது நிர்வாக உத்தரவுகளில் சம்பந்தப்பட்டிருந்தால் , கடப்பிதழ் புதுப்பித்தல் பாதிக்கப்படலாம் அல்லது நிர்வாக உத்தரவு கட்டுப்பாடு காரணமாக கடப்பிதழ் விண்ணப்பங்களை செயல்படுத்த முடியாத நபர்களுக்கு முகப்பிடங்களில் உள்ள அதிகாரி வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ இது தொடர்பான தகவலை தெரிவிப்பார் என்றும் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.



