
கோலாலம்பூர், செப்டம்பர் 10 – மின் சிகரெட் (Electronic Cigarette) மற்றும் வேப்பின் (Vape) விற்பனையை முழுமையாகத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
முதலில் “திறந்த அமைப்பு” (Open System) கொண்ட வேப் தயாரிப்புகள் தடைசெய்யப்பட்ட பின்னர் இத்திட்டம் அனைத்து வகையான வேப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கெஃப்லி அஹ்மட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
சுகாதார அமைச்சைத் தவிர நிதி அமைச்சு, Kastam, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதார செலவுகள் அமைச்சு, காவல்துறை, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு, மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (MIDA) மற்றும் சட்ட ஆலோசகர் அலுவலகம் ஆகியவையும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
இந்தத் திட்டத்திற்கான ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு கொள்கை ஒப்புதல் பெற்றப் பின்னரே நாட்டில் வேப் மற்றும் மின்னழுத்த சிகரெட் விற்பனைக்கு முழுமையான தடை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜோகூர், கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா மற்றும் பஹாங் ஆகிய ஆறு மாநிலங்கள் வேப் விற்பனை உரிமங்களை வழங்குவதற்கு தடை விதித்திருப்பதற்கு சுகாதார அமைச்சு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.