
சிம்பாங் அம்பாட், ஜூலை-28-பினாங்கு சிம்பாங் அம்பாட்டில் மளிகைக் கடை ஒன்றின் அருகே, முகமூடி அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்ட 38 வயது ஆடவர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
நேற்று காலை 10 மணியளவில் Jalan Perniagaan Seri Tambun-னில் உள்ள கடைத் தொகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் முட்டை வாங்கிவிட்டுத் தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
அங்கு இருந்த சாட்சிகளின் கூற்றுப்படி, முகமூடி அணிந்த அந்த நபர், அவரை நெருங்கி பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
பாதிக்கப்பட்டவர், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள உணவுக் கடைக்கு ஓடிய வேளை, தாக்குதல்காரன் துரத்திச் சென்று தொடர்ந்து குறைந்தது 5 முறை சுட்டுள்ளான்.
அதிலொரு தோட்டா வலது கையில் பட்டு காயமடைந்த நபரை, பொது மக்கள் செபராங் ஜெயா மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றனர்.
தாக்குதலை நடத்திய நபர், அருகில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டான்.
சந்தேக நபரையும், அவன் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தையும் அடையாளம் காண, போலீஸார் அப்பகுதியில் உள்ள CCTV கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.



