கோலாலம்பூர், மார்ச் 28 – பண்டிகை காலங்களில் பலர் தங்கள் வாகனங்களை ஆக்கப்பூர்வமான விதத்தில் அழகுப்படுத்துவது வழக்கம்.
அண்மையில், தனது வாகனத்தை வண்ண விளக்குகளை கொண்டு அழகுப்படுத்த தமக்கு ஆறு மணி நேரம் பிடித்ததாக, நூர் அலியா எனும் பெண் ஒருவர் தமது @kaksuemeow எனும் டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
வைரலாகி இருக்கும் அந்த பதிவில், நூர் அலியா தமது காரின் படத்தையும் இணைத்துள்ளார்.
எனினும், வாகனங்களை அவ்வாறு வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிப்பது குற்றம் என, JPJ சாலை போக்குவரத்து துறை அதிகாரி முஹமட் சியாமி அப்துல் லத்திப் தெரிவித்துள்ளார்.
அதற்காக, அக்காரின் உரிமையாளருக்கு நூறு முதல் 200 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்க முடியும் எனவும் லத்திப் கூறியுள்ளார்.
அதனால், அந்த விளக்குகளை உடனடியாக அகற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், புக்கிட் பிந்தாங்கில் தாம் பலமுறை போலீசாரை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், இதுவரை தமக்கு யாரும் அபராதம் விதித்தது இல்லை என நூர் அலியா தமது வைரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பலர் தம்மை பாராட்டி சென்றதாகவும், அதனால் தற்சமயம் அந்த விளக்குகளை தாம் அகற்றி இருந்தாலும், விரைவில் அவற்றை மீண்டும் பொருத்தப்போவதாகவும் நூர் அலியா பதிவிட்டுள்ளார்.