
புது டெல்லி, ஜூன்-5 – ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மேற்கொண்ட மலேசிய வருகையை சீர்குலைக்க, பாகிஸ்தான் முயன்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
‘இஸ்லாமிய ஒற்றுமையை’ மனதில் வைத்து அந்த இந்தியப் பேராளர்கள் குழுவின் நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறு இஸ்லாமாபாத் வற்புறுத்தியதாகவும், ஆனால் மலேசியா அதனை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவின் பிரபல NDTV தொலைக்காட்சி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூலமாக அம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் அது நிறைவேறவில்லை; மலேசியா வந்த இந்தியப் பேராளர்கள் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடந்ததோடு, நல்ல ஆதரவும் கிடைத்ததாக NDTV கூறியது.
இச்சம்பவம், மலேசியாவுடனான அரச தந்திர உறவில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சஞ்சய் குமார் ஜா தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் மலேசியா வந்து, அரசாங்க அதிகாரிகளையும், சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கமளித்தது.
மலேசியா தவிர்த்து சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் அக்குழு பயணமானது.