
கோலாலம்பூர், ஜனவரி-24-மலேசியாவில் வங்காளதேச தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் உடனடி சுயேட்சை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான சார்ல்ஸ் சாந்தியாகோ அதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, போலி வேலை வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, கடன் சுமையில் சிக்கியுள்ளதாக Bloomberg நிறுவனம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது, கடன் கொத்தடிமைத்தனம், கட்டாய உழைப்பு மற்றும் கடத்தலுக்கு வழிவகுத்துள்ளது.
இரு நாடுகளிலும் உள்ள ஒரு கும்பல் மற்றும் பல அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம், மலேசியாவின் தொழிலாளர் சந்தை நம்பகத்தன்மை மற்றும் அனைத்துலக மனித உரிமை கடமைகளை நேரடியாக பாதிக்கும் வகையில் கவலைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
தொழிலாளர் தருவிப்பு முகவர்களை கண்காணிக்க கடுமையான விதிகள், வெளிப்படையான வேலை ஒப்பந்தங்கள், மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
இதற்கு வங்காளதேசம், மலேசியா ஆகிய இரு நாட்டு அரசுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.



