
ஜோகூர் பாரு, மார்ச்-10-ஹரிமாவ் மலாயா அணியின் 7 வீரர்களின் ஆவண மோசடி விவகாரத்தில் எல்லாரும் தன்னையே ‘கருப்பு ஆடாக’ ஆக்க முயற்சிப்பதை, JDT உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சாடியுள்ளார்.
இதற்கு, மலேசியக் கால்பந்து சங்கமான FAM-மில் உள்ளவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், மாறாக தன்னை குற்றம் சாட்டக் கூடாது என, சமூக ஊடகப் பதிவில் TMJ வலியுறுத்தினார்.
ஆவண மோசடி ஏற்பட்டது எப்படி? யார் அவற்றைத் தயாரித்தது? யார் அவற்றை சமர்ப்பித்தது? என்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை வேண்டும்; அதை விடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டக்காரர்கள் மீது பழிபோடுதல் கூடாது என, ஜோகூர் இடைக்கால சுல்தானுமான அவர் சொன்னார்.
“ஆரம்பத்திலிருந்தே FAM அதிகாரிகளில் சிலருக்கு என்னைப் பிடிக்காது. தனிப்பட்ட நன்மைக்காக வாய்ப்புகளைத் தடுக்கப்பட்டதால் என் மீது அவர்களுக்கு அதிருப்தி. இப்போது, சில ஊடகங்கள் மற்றும் ரசிகர் குழுக்களும் என்னைக் குறி வைத்து தாக்குகின்றன” என TMJ குற்றஞ்சாட்டினார்.
ஆனால், தன்னை குற்றவாளியாக்க முடியாது என்றும், உண்மையான பொறுப்பாளர்கள் வெளிப்படையாகக் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆவண மோசடி தொடர்பில் FIFA விதித்த தண்டனையை எதிர்த்து அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றம் சென்ற FAM அதில் தோல்விகண்டதலிருந்து, சமூக ஊடகங்களில் தம் மீது பழிபோடப்பட்டு வரும் நிலையில், துங்கு இஸ்மாயில் இவ்வாறு காட்டமாகக் கூறியுள்ளார்.



