
கோலாலாம்பூர், ஜூன்-24- MRT நிலையமொன்றில் ஒரு பெண்ணின் பாவாடையை படம் பிடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட ஓர் இளைஞன், பின்னர் உடைந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று டிக் டோக்கில் @shuqi97 என்பவரால் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையுடன் இரயிலில் ஏறத் தயாராக இருந்தபோது, பதின்ம வயது அவ்விளைஞன் அவரின் பாவாடையின் கீழ் இரகசியமாக கைப்பேசியை நீட்டியதை, அப்பெண்ணின் கணவர் கவனித்து விட்டார்.
கோபமடைந்த கணவர் உடனடியாக சந்தேக நபரை எதிர்கொண்டு, அவனது கைப்பேசியைப் பிடுங்கி, அவனது கழுத்தைப் பிடித்து, அருகிலுள்ள MRT ஊழியர் ஒருவரிடம் இழுத்துச் சென்றார்.
போலீஸில் புகார் செய்யப்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில், அப்பையன் தரையில் விழுந்து, தன்னைப் பிடித்த நபரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அங்கிள், தயவுசெய்து நான் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று கதறினான்.
சாதாரணமாக MRT காட்சிகளை பதிவுச் செய்ததாகவும், அப்போது ‘தற்செயலாக’ பாவாடைக் காட்சியும் பதிவாகி விட்டதாக அவன் கூறிய போதும், அவனது நடத்தை பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
வலைத்தளவாசிகளும் அவனை ‘நம்பத்’ தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.
“அந்த நபரின் காலில் கெஞ்சியதிலிருந்தே அவன் தவறு செய்துள்ளது தெளிவாக தெரிவதாக” ஒரு பயனர் கூறினார்.
“போலீஸில் புகார் செய்யுங்கள்; இந்த சிறிய வயதில் இவனுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்” என மற்றொரு வலைத்தளவாசி கூறினார்.
எனினும், போலீஸில் முறைப்படி புகார் செய்யப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.