
கோலாலம்பூர், பிப்ரவரி-20-ஜனநாயக செயல் கட்சியான DAP, அதன் தலைவர்கள் அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டுமா என்பதை வரும் ஜூலை 12-ஆம் தேதி தீர்மானிக்கவுள்ளது.
சுமார் 4,000 கட்சிப் பேராளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மாநாட்டில் அம்முடிவு எடுக்கப்படும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
கடந்தாண்டு சபா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, கட்சியின் அரசியல் நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஒருவேளை பதவிகளில் இருந்து விலகினாலும், DAP நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பார்கள் என்றார் அவர்.
இந்த மாநாடு அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கான கட்சியின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் என, போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ள DAP, அன்வார் அமைச்சரவையில் 5 முழு அமைச்சர், 7 துணை அமைச்சர் பதவிகளை கொண்டுள்ளது.
அதோடு, ஒரு செனட்டர், ஒரு மாநில முதல்வர், 21 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளையும் அக்கட்சியினர் வகிக்கின்றனர்.



