
புத்ரா ஜெயா , டிச 30 – பெர்லீஸில் எதிர்க்கட்சி அரசியல் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து வலுவானதாகவும் நேர்மையாகவும் இருப்பது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உண்மையில், ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த நாசவேலை மற்றும் துரோக முயற்சிகளும் இல்லை என்பதற்கு தாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் அன்வார் கூறினார்.
பெர்லிஸில் எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை உள்ளடக்கிய அரசியல் சர்ச்சை குறித்து கருத்துரைக்கும்படி வினவப்பட்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பெர்லீசில் பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
அந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் மந்திரி பெசார் Mohd Shukri Ramliயின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அரண்மனைக்கு எழுத்துப்பூர்வமான சத்தியப்பிரமாணத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஸ் கட்சியின் மத்திய செயலவை கடந்த புதன்கிழமை முடிவு செய்தது.
மேலும் அவர்களின் சட்டமன்ற தொகுதிகள் காலியாகிவிட்டதாக பெர்லீஸ் சபாநாயகர் Russele Eizan தேர்தல் ஆணைக்குழுவிடம் நேற்று தெரிவித்திருந்தார்.



