
கோலாலம்பூர், மே-14 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது, நமது ஜனநாயக அமைப்புகளின் முன்னுரிமை மற்றும் நெறிமுறையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ அவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக பேசுபவர்களின் வாயை அடைப்பதற்காக அவர்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்படுவதையே இது காட்டுகிறது.
பொருளாதார நிச்சயமின்மை, இளைஞர்களுக்கானவேலைவாய்ப்பு பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவின உயர்வு என மலேசியாவுக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன.
இந்த நிலையில், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசியல் வசதிக்கேற்றாற்போல நீதி செங்கோலாக மாறிவிடும் என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
ராமசாமி மீதான புகார்கள் புதியவை அல்ல; பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருபவை தான்.
ஆனால், பாரபட்சம், அரசு நிர்வாகத் திறன், நிறுவன சீர்திருத்தங்கள் தொடர்பில் பிரதமரை ராமசாமி வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிய பிறகே அவசர கோலத்தில் அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.
இது, அரசியல் பழிவாங்கலே என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.
இது வெறும் ராமசாமியைப் பற்றியதல்ல; மாறாக அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் அரசு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியதாகும்.
மலேசியா உண்மையிலேயே முன்னேற்றகரமான, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நாடாக உருமாற விரும்பினால், பழைய அடக்குமுறைகள் வழிகாட்டிய அரசியல் பழிவாங்கல் நாடகங்களை நாம் அனுமதிக்க முடியாது.
இல்லையென்றால், ‘மடானி’ மந்திரம் வெறும் ஓசையாகிப் போகுமென சார்ல்ஸ் சாந்தியாகோ நினைவுறுத்தினார்.
பினாங்கு அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்த போது, சுமார் 800,000 ரிங்கிட் நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக ராமசாமி மீது இன்று 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அனைத்தையும் மறுத்து அவர் விசாரணைக் கோரியுள்ளார்.