
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
முன்னதாக விமானப் பணியாளர்கள் உள்பட அனைத்து 242 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆடவர் உயிர் பிழைத்ததை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிச் செய்துள்ளது.
A11 எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்த 38 வயது ரமேஷ் விஷ்வாஸ் குமார் புச்சார்வடா, விமானம் விழுந்த போது அவசர கதவு வழியாகக் குதித்து தப்பியுள்ளார். காயங்களுடன் ரமேஷ் நடந்து செல்லும் வீடியோவும், அவரின் விமான டிக்கெட்டும் வைரலாகியுள்ளது.
ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் லண்டன் புறப்பட்ட AI 171 விமானம், 3 நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் குஜராத் முன்னாள் முதல் அமைச்சர் விஜய் ரூபானி உட்பட 169 இந்தியப் பிரஜைகள் பலியாயினர். மற்றவர்கள் 53 பிரிட்டன் பிரஜைகள், 7 பேர் போர்ச்சுகீசியர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது விமானம் விழுந்தது. இதில் அங்கிருந்த 5 மருத்துவ மாணவர்கள், 1 மருத்துவர் மற்றும் இன்னொரு மருத்துவரின் மனைவி உட்பட 7 பேர் உயிரிழந்ததும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் வேளை, 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைக்காக விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறையின் குரல் பதிவு கருவியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.