
கோலாலம்பூர், ஜூன்-5 – தனியார் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோவின் தரவு அமைப்பு முறையில் தன்னிச்சையாக மாற்றம் செய்ததாக, 743 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதன் முன்னாள் பணியாளர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார்.
30-ஆவது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 48 வயது Nora Idayu Jaafar குற்றவாளி கூண்டில் மயங்கி விழுந்ததால், அவை நிகழ்வு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து Nora மருத்துவ சிகிச்சைப் பெறவும் ஓய்வெடுக்கவும் ஏதுவாக, ஜூன் 26-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 10,000 ரிங்கிட் தொகையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
2013 முதல் 2020 வரை ஆஸ்ட்ரோவின் வர்த்தக ஆதரவுப் பிரிவில் பணியாற்றிய சமயத்தில், வாடிக்கையாளர் மேலாண்மை அமைப்பு முறையை யாருக்கும் தெரியாமல் Nora மாற்றி அமைத்துள்ளார்.
இதன் மூலம் 743 வழக்கமான வாடிக்கையாளர் கணக்குகள் வர்த்தகக் கணக்குகளாக மாற்றப்பட்டு, அப்பயனர்களுக்கு இலவசமாகவே உள்ளடக்கங்கள் கிடைக்க வகை செய்ததாக Nora குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள Menara Icon கட்டடத்தில் ஆஸ்ட்ரோ அலுவலகத்தில் அக்குற்றங்கள் புரியப்பட்டுள்ளன.
1997- ஆம் ஆண்டு கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 ரிங்கிட் அபராதமும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.