
ஜோர்ஜ்டவுன், ஜூன்-4 – பினாங்கு, ஜோர்ஜ்டவுனைச் சேர்ந்த 46 வயது ஆடவர் இணைய மோசடியில் சிக்கி 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.
மருத்துவ நிறுவனமொன்றின் நிர்வாகியான அவ்வாடவர், ஒரு இன்ஸ்டகிராம் விளம்பரத்தால் கவரப்பட்டுள்ளார்.
அதன் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி, அவரின் பேச்சால் பங்கு முதலீட்டில் ஈடுபட அவ்வாடவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
கணிசமாக இலாபம் கிடைக்குமென அவர் நம்ப வைக்கப்பட்டார்.
இதையடுத்து ‘தைரியமாக’ அதிலிறங்கியவர் ‘TPG PRO’ எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் கடைசியில் 20 தடவையாக 4 வங்கிக் கணக்குகளுக்கு 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணத்தை மாற்றினார்.
சொல்லியபடி கமிஷன் தொகையைத் தராமல் தம்மை இழுத்தடித்தோடு, மேலும் பணம் கட்டினால் தான் கமிஷன் கிடைக்குமென அவரிடம் கூறப்பட்டது.
இதையடுத்தே தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அவர் போலீஸில் புகார் செய்தார்.