
நிபோங் தெபால், மே 6- பெண் ஊழியர் ஒருவருக்கு, தான் ஒரு குற்றவியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பினால், பதற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் மோசடி கும்பலால் 489,550 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், 39 வயதான அப்பெண்ணுக்கு, காவல் துறை அதிகாரி பேசுவது போல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக தெற்கு செபராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜே ஜனவரி சியோவோ (Jay January Siowou) கூறினார்.
அந்த அழைப்பில் சம்பந்தப்பட்ட அப்பெண், குற்றவழக்கில் ஈடுப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிரான விசாரணையை முடிக்க பணம் செலுத்த வேண்டும் என்றும் நம்பவைக்கப்பட்டிருக்கின்றார். அதே நேரத்தில், அந்த மோசடி கும்பல்,இச்சம்பவம் குறித்து யாரிடமும் பகிர கூடாதென்றும் மிரட்டியுள்ளது.
இதனால் பீதியடைந்த அவர், வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சுமார் 489,550 ரிங்கிட் பணத்தை செலுத்தியுள்ளார். பிறகு தன் தம்பியின் ஆலோசனையின்படி, சுங்கை பகாப் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வந்திருக்கிறார்.
மேலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இத்தகைய மோசடி கும்பலிடம் சிக்காமல், விழித்திருக்க வேண்டுமென்றும் சியோவோ கூறினார்