
கோலாலம்பூர், ஜூன்-2 – ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மூண்டுள்ள மோதல், அவ்விரு நாடுகளை மட்டுமே உட்படுத்தியதாகும்.
எனவே மற்ற நாடுகள் அதில் மத்தியஸ்தம் செய்ய வேண்டியதில்லை என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா கூறினார். அதேவேளையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த மலேசியாவின் செயலை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார் அவர்.
அனைத்துக் கட்சிகளையும் உள்ளக்கிய 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்குத் தலைமையேற்று மலேசியா வந்துள்ள சஞ்சய், நேற்று செய்தியாளர்களிடம் அவ்வாறு பேசினார்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ திட்டம் குறித்து உலக நடுகளுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு இக்குழு மலேசியா வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுன் துணை போனதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக அக்குழு விளக்கமளித்தது. இந்தியா அமைதியை விரும்புகிறது. பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. ஆனால் அதனை சீர்குலைப்பதே பாகிஸ்தானின் எண்ணமாக இருப்பதாக சஞ்சய் கூறினார்.
26 பேரை பலிகொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டத்தைத் தணிக்க மலேசியா தயாராக இருப்பதாக மே 5-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் அனைத்துலகக் கண்காணிப்பு அமைப்பான FATF பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க இந்தியா முயற்சிப்பதாக சஞ்சய் கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இந்திய அரசாங்கத்திடம் உள்ளன.
“மலேசியா உட்பட மற்ற வெளிநாடுகள் இதில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என சஞ்சய் கூறினார்.
பாகிஸ்தான் ஏற்கனவே 2012 முதல் 2015 வரையிலும் பின்னர் 2018 முதல் 2022 வரையிலும் அப்பட்டியலில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.