
ஈப்போ, ஏப்ரல்-17, பேராக் Menglembu-வில் உணவகமொன்றில் ஈப்போ மாநகர மன்றத்தினர் அமுலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட சலசலப்பு குறித்து, போலீஸ் விசாரித்து வருகிறது.
40 வயது அமுலாக்க அதிகாரி, வைரலான அச்சம்பவம் குறித்து நேற்று மாலை புகாரளித்தாக, ஈப்போ போலீஸ் தலைவர் ACP அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் கூறினார்.
சுகாதாரத் துறை கொடுத்த புகாரின் பேரில் அமுலாக்க அதிகாரிகள் மேசை நாற்காலிகளுக்கு சீல் வைத்த போது, உணவகப் பணியாளர் ஒருவர் சண்டைக்கு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி திட்டியதோடு, அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதிலிருந்தும் அவர் தடுத்துள்ளார்.
தவிர, அமுலாக்க அதிகாரி ஒருவரை அவ்வாடவர் ஓங்கி முகத்தில் குத்தினார்.
இதையடுத்து, சிறு சிறு குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த ஏதுவாக, சம்பவத்தை நேரில் பார்த்த காட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டு வருவதாக, அபாங் சைனால் கூறினார்.
5 நிமிடங்களுக்கு மேலான சம்பவ வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில் அமுலாக்க அதிகாரிகளுக்கும் சில நபர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுவதையும், ஒரு பெண் மயங்கி விழுவதையும் காண முடிந்தது.