
ஜெம்போல், ஜன 17 – இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் காப்புறுதி முகவர் ஒருவர் 666,546 ரிங்கிட் இழந்தார். 61 வயதுடைய அந்த ஆடவர் தனது இ.பி.எப் பணத்தை இழந்ததோடு மட்டுமின்றி தனது நண்பர்களிடமும் ஆயிரக் கணக்கில் பணத்தை கடனாகவும் பெற்று அந்த முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை இழந்து ஏமாந்துள்ளார். Bahau வில் வசித்துவரும் அந்த ஆடவர் கடந்த ஆண்டு முகநூலில் வெளியான முதலீடு திட்டத்தைப் பார்த்து ஏமாந்துள்ளார் என ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hoo Chang Hook தெரிவித்தார். 250,000 ரிங்கிட் முதலீடு செய்தால் அமெரிக்க டாலராக கூடுதலாக அதாவது 1.5 மில்லியன் ரிங்கிட்வரை வருமானம் கிடைக்கும் என அந்த ஆடவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனால் கவரப்பட்ட அந்த நபர் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி முதல் முறையாக 4,220 ரிங்கிட்டும் அதன்பின் அக்டோபர் 5ஆம்தேதி முதல் இம்மாதம் ஜனவரி 7ஆம்தேதிவரை 24 முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார். வெவ்வேறு ஐந்து வங்கிக் கணக்குகளில் அந்த ஆடவர் முதலீட்டுக்காக பணத்தை பட்டுவாடா செய்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு இந்த ஜனவரி மாதம்வரை எந்தவொரு வருமானமும் கிடைக்காததைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.