
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – பினாங்கில் வீடுகளை வாங்க இந்திய முஸ்லீம்களுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட 5 விழுக்காடு விலைக் கழிவுச் சலுகை, அனைத்து சமூகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
முதல் அமைச்சர் Chow Kon Yeow அதனை அறிவித்துள்ளார்.
சொத்துடைமைத் துறைக்கு குறிப்பாக விற்கப்படாமலிருக்கும் வீடுகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில்,
அச்சலுகை, சொந்த வீடு வாங்கும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென பரவலாக கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதையடுத்து, மேம்பாட்டாளர்களுடன் கலந்துபேசி அனைவருக்கும் அச்சலுகைக் கிடைக்கும் வகையில் அக்கொள்கையை செம்மைப்படுத்துமாறு, வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூவை முதல் அமைச்சர் பணித்துள்ளார்.
இதன் வழி சமூக நீதி கொள்கைக்கு ஏற்ப, இப்புதிய முன்னெடுப்பு அனைத்து மக்களுக்கும் நன்மைப்பயக்கும் என்றார் அவர்.
இந்திய முஸ்லீம்களுக்கான 5% கழிவுச் சலுகையை சுந்தரராஜூ கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.
இது பரவலாக விமர்சனங்களைப் பெற்ற வேளை அக்கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அக்கொள்கை மறுஆய்வு செய்யப்படும் என பினாங்கு DAP தலைவரும் மனிதவள அமைச்சருமான ஸ்டீவன் சிம்மும் கூறியிருந்தார்.