
புத்ராஜெயா, ஜூன்-19 – ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு தொடர்ந்து முன்னுரிமைக் கொடுத்து வருவதாக அறிக்கையொன்றில் அது கூறிற்று.
ஈரானிய நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தேவைப்பட்டால் மலேசியர்கள் தாயகம் திரும்புவதற்கான உதவிகள் உட்பட அனைத்து தூதரக உதவிகளை வழங்கவும் தமது தரப்பு முழு தயார் நிலையில் இருப்பதாக விஸ்மா புத்ரா கூறியது.
ஈரானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அமைச்சு நடவடிக்கை அறையைத் திறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை வாக்கில், ஈரானிலிருந்து மலேசியர்கள் தாயகம் கொண்டு வரப்படுவர் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் முன்னதாகக் கூறியிருந்தார்.
இஸ்ரேல் – ஈரான் மோதல் மோசமாகி வருவதால், நேரம் கடத்தாமல் ஈரானிலிருந்து வெளியேறுமாறு மலேசியர்களும் அறிவுறுத்தபட்டுள்ளனர்