உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலி; உலகளாவிய இறக்குமதிக்கு தற்காலிக 10% வரி விதித்த ட்ரம்ப்

வாஷிங்டன், பிப்ரவரி-21,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், உலகளாவிய இறக்குமதிகளுக்கு தற்காலிகமாக 10 விழுக்காடு வரி விதித்துள்ளார்.
ட்ரம்ப் ஏற்கனவே விதித்த ‘பரஸ்பர வரிகள்’ சட்டத்திற்கு புறம்பானவை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இப்புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி 150 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.
1974‑ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதர வர்த்தகச் சட்டங்கள் தொடர்பான புதிய விசாரணைகள் தொடங்கப்படும் வரை, அமெரிக்க தொழில்களை பாதுகாக்கும் இடைக்கால நடவடிக்கையாக அவர் இதை விளக்கினார்.
குறிப்பிட்ட நாடுகள் என்றில்லாமல் உலகளவில் இந்த 10% வரி, நடப்பு வரிகளுக்கு மேல் விதிக்கப்படும்.
இதனால், இறக்குமதி பொருட்கள் அதிக விலை பெறும் அபாயம் இருப்பதாக வணிக நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
அதேசமயம், அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பும் அதிகமுள்ளது.
உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கும் இந்த அறிவிப்பு, அடுத்த சில மாதங்களில் பெரும் விவாதத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



