
கோலாலம்பூர், ஏப் 8 – உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக MCMC எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் 36 விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக , நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 22 நபர்கள் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், ஆறு விசாரணை ஆவணங்கள் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 500,000 ரிங்கிட் அல்லது 2 ஆண்டுகள்வரை சிறை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும். 1998 ஆம் ஆண்டின் (சட்டம் 588) தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொய்யான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை MCMC கடுமையாகக் கருதுகிறது.
தற்போதுள்ள சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்து.



