
ஷா அலாம், மார்ச்-31- உலகளவில் ஜெட் விமானங்களின் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வரும் காலத்தில் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என்பதால் அதனை எதிர்நோக்குவதற்கு பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் எச்சரித்துள்ளார்.
இத்துறையில் செயல்திறனை உறுதி செய்வதற்காக விமானப் பயணங்களை முறைப்படுத்துவதோடு, அதிகரித்த நடவடிக்கை செலவுகளை ஈடுகட்ட, விமான நிறுவனங்கள் தற்போது எரிபொருள் கூடுதல் கட்டணங்களை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.
கட்டணங்கள் உயரும் என்பது உண்மைதான். விமான நிறுவனங்கள் இப்போது தங்கள் டிக்கெட்டுகளின் மீது எரிபொருள் கூடுதல் கட்டணங்களை விதிக்கின்றன.
ஜெட் எரிபொருளின் விலை, விமான நிறுவனங்கள் செயல்படுவதற்கு மிகவும் அதிகமாக இருப்பதால், இது ஒரு தவிர்க்க முடியாத நடவடிக்கையாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மேலும், சில துறைகளுக்கு பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால், இந்த சீரமைப்பு நடவடிக்கையானது விமான நிறுவனங்களை ஒன்றிணைப்பதை உள்ளடக்கியிருக்கலாம்.
சுதந்திர சந்தை என்பதால், விமான டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பு விலைகளை நிர்ணயிக்கும் கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தாது என்றும் அந்தோனி லோக் தெளிவுபடுத்தினார்.
செலவுகளை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு நாம் தலையிட்டு விலைகளைக் கட்டுப்படுத்தினால், நிறுவனங்கள் விமானப் பயணங்களை ரத்து செய்யக்கூடும் என்றும் அவர் விவரித்தார்.



