
கோலாலும்பூர், ஜூன் 24 – இன்று காலை வெளிவந்த 2024ஆம் ஆண்டின் எஸ்.தி.பி.எம் (STPM) தேர்வு முடிவுகளில் தேசிய ஒட்டுமொத்த தரப் புள்ளி (OGP), 2.85 ஆக உயர்வு கண்டுள்ளதென்று மலேசிய தேர்வு ஆணையத்தின் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் எம்.டி. அமின் எம்.டி. டாஃப் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு மொத்தம் 1,266 மாணவர்கள் எஸ்.தி.பி.எம் தேர்வை எழுதியதைத் தொடர்ந்து அதில் 3.06 சதவீத மாணவர்கள் 4.00 CGPAகளை பெற்றுள்ளனர் என்றும் 5A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு STPM தேர்வெழுதியவர்களில் ஐந்து மற்றும் நான்கு பாடங்களில் முழு தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் சற்று அதிகரித்துள்ளது என்றும் 99.97 சதவீதம் பேர் அல்லது 41,422 மாணவர்கள் STPM சான்றிதழைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மலேசிய தேர்வு ஆணையம் 1,000 ரிங்கிட் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க 20 சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதென்று அறிபடுகின்றது.