
புத்ரா ஜெயா , அக்டோபர்-15,
யூனிடென் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சோஷியல் ஐ-டெனகா (SiTA) அமைப்பின் ஏற்பாட்டில், யூனிடென் ஆய்வகம் ஒன்றிணைந்து இலவச எஸ்.பி.எம் கருதரங்கை புத்ரா ஜெயாவிலுள்ள யூனிடென் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் 160 ஐந்தாம் படிவ மாணவர்கள் கலந்துகொண்டு தன்முனைப்பு மற்றும் இறுதிக்கட்ட தேர்வு ஆயத்த நடவடிக்கைகள் மூலம் பயன் அடைந்தனர். இவர்களில் 30 விழுக்காடு மாணவர்கள் B40 எனப்படும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் . அனைத்து மாணவர்களும் சம வாய்ப்புகளை பெற்று கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற SiTA-வின் குறிக்கோளுக்கு ஏற்ப இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
முக்கிய பாடங்களில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் இக்கருத்தரங்கை வழி நடத்தினர். சரியான வழிகாட்டுதல், தன்னம்பிக்கை மற்றும் தேவையான ஆதரவு கிடைத்தால் மாணவர்கள் SPM தேர்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை SiTA தரப்பினர் தெரிவித்தனர். SiTA அமைப்பு என்பது டிஎன்பி இந்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நடத்திவரும் ஓர் அரசு சார்பற்ற இயக்கமாகும்.