
கோலாலம்பூர், மார்ச்-28- Raaja Rhapsody என்ற நேரடி இசை நிகழ்ச்சியின் வாயிலாக இசைஞானி இளையராஜா மலேசிய இரசிகர்களை மகிழ்விக்க வருவது அனைவரும் அறிந்ததே.
ஏப்ரல் 5-ஆம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் ஹாக்கி விளையாட்டரங்கமே இன்னிசை மழையால் நனையவுள்ளது.
இந்நிலையில் இசை இரசிகர்களால் மறக்க முடியாத இரவாக அந்நிகழ்ச்சி அமையுமென, ஏற்பாட்டாளரான Pink Creative Agency நிறுவனத்தின் ரவிவர்மன் விக்ரமன் உத்தரவாதம் வழங்குகிறார்.
இளையராஜாவின் இரவாப் புகழ் பெற்ற 40 பாடல்களுடன், திரையரங்களுகளில் இரசிகர்களைக் கட்டிப் போட்ட BGM பின்னணி இசையால் புக்கிட் ஜாலில் ஹாக்கி அரங்கமே அதிருவது உறுதியென, வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் சொன்னார்.
இளையராஜா இசைநிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதுமையாக, இரசிகர்கள் தெரிவுச் செய்த பாடல்கள் பாடப்படவுள்ளன.
தமிழகத்தின் சென்னை மற்றும் ஹங்கேரி நாட்டின் புடாபேஸ்ட் நகரிலிருந்து 70 இசைக் கலைஞர்களுடன் அந்த மாபெரும் இசை விருந்தை இசைஞானியார் படைக்கிறார்.
இசைத் துறையில் 50 ஆண்டுகளாக கோலோச்சும் இளையராஜாவுக்கே இம்முறை இந்த இசை நிகழ்ச்சி புதிய அனுபவமாக இருக்குமென ரவிவர்மன் கூறினார்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை www.myticket.asia இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
வணக்கம் மலேசியாவும் இந்த Raaja Rhapsody இசை நிகழ்ச்சியின் ஊடக ஆதரவாளராகும்.