
கோலாலம்பூர், ஜூன் 17 – தனது அசௌகரியமான இ-ஹெய்லிங் பயண அனுபவத்தை பெண் பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததோடு , அந்த வாகனத்தின் சுகாதாரமற்ற நிலை காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவர் கூறியதைத்தொடர்ந்து , அந்தப் பதிவு வைரலாகியுள்ளது.
அந்தப் பயணத்தின் வீடியோ மற்றும் படங்களுடன் தனது அனுபவத்தை த்ரெட்ஸ் பயணர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இது சமூக ஊடகப் பயனர்களிடமிருந்து வேடிக்கையான மற்றும் அருவருப்பான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. அந்தக் காரின் கதவு சீல்களைச் சுற்றி பூஞ்சை இருந்ததோடு , ஏர் கண்டிஷனிங் வசதியின்றி , வாகனத்திற்குள் பல சிறிய மின்விசிறிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.
அக்காரின் ஓட்டுநர் பயணிகளை ஏற்றிச் செல்ல விரும்பினாரா அல்லது உலர்ந்த படுக்கை விரிப்புகளை காரில் கொண்டு செல்ல விரும்பினாரா என்று தனக்குத் தெரியவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். அதோடு அந்தப் பயணத்தின் போது தனக்கு உடல் வலி, தலைவலி, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



