
தங்காக், ஜூன்-26 – ஜோகூர் தங்காங்கில் ஏற்கனவே 39 குற்றப்பதிவுகளை வைத்திருந்தும் தொடர்ந்து வீடுடைத்துத் திருடி வந்த முதியவர், ஒருவழியாக போலீஸிடம் பிடிபட்டுள்ளார்.
புக்கிட் காம்பிர், சுங்கை மத்தி போன்ற இடங்களில் கைவரிசை காட்டி வந்த 60 வயது அவ்வாடவர், பொது மக்கள் கொடுத்தத் தகவலின் பேரில் நேற்று பிற்பகல் கைதானார்.
தனியாக நடமாடும் அந்நபர், ஆளில்லா வீடுகளைக் குறி வைத்து திருடி வந்துள்ளார்.
அவரின் அடுக்குமாடி வீட்டிலிருந்து மொத்தம் 300,000 ரிங்கிட் மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பைகள், ஆடம்பரக் கைகடிகாரங்கள், ரொக்கப் பணம், வீடுடைக்கப் பயன்படுத்தப்படும் screwdriver , கையுறைகள், கைலாம்பு உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அம்முதியவர் கைதாகியிருப்பதன் மூலம் அவ்வட்டாரத்தில் 8 திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. விசாரணைக்கு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.