
ரந்தாவ் பாஞ்சாங், கிளந்தான், ஜூன் 4 – நேற்று, பொது செயல்பாட்டுப் படை (GOF), தானா மேரா பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும், 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான கருப்பு முள் டுரியான் மரக்கன்றுகள், அரிய வகை ‘சைக்காஸ்’ (Cycas) தாவரங்கள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் தாவரங்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று GOF தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துல் ஹமீத் (Datuk Nik Ros Azhan Nik Abdul Hamid) தெரிவித்துள்ளார்.
ஆரம்ப விசாரணையில், ஜோகூர் முவாரிலுள்ள நர்சரி ஒன்றுக்கு, இந்தச் சரக்குகள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பாசிர் மாஸ் மாவட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், எல்லை தாண்டிய கடத்தலைத் தடுப்பதற்கு GOF தொடர்ந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.