
ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 5 – கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 140,000 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசிய பாதுகாப்புப் படையான APM தெரிவித்துள்ளது. இது மருத்துவ அவசரங்கள் மற்றும் சாலை விபத்துகளுடன் சேர்ந்து, APM அதிகம் கையாளும் முக்கிய சம்பவங்களில் ஒன்றாக உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டுக்கு சராசரியாக 10,000 சம்பவங்கள் பதிவாகின்றன என்றும் பினாங்கில் மட்டும் 8,193 சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன என்றும் APM துணை தலைமை ஆணையர் Ghazali Abd Rahman கூறியுள்ளார்.
அண்மைய வெப்பநிலை உயர்வு மற்றும் இயற்கை வாழிடங்களின் பாதிப்பு காரணமாக, பாம்புகள் உணவு மற்றும் தஞ்சம் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாக அவர் தெரிவித்தார். இதே நிலை சிலாங்கூர், ஜோகூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது.
காடுகள் மற்றும் பசுமை பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில், விஷப்பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகள் அதிகம் பிடிக்கப்படுகின்றன. சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு போன்ற மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இச்சம்பவங்கள் அதிகம் பதிவாகுகின்றன.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் பினாங்கில் 669 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என APM தெரிவித்துள்ளது.



