
ஜோகூர் பாரு, மே 8 – சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட உரிமம் பெறாத சடடவிரோதமாக வட்டிக்கு பணம் வழங்கும் கும்பல் அல்லது அலோங் எனப்படும் வட்டி முதலைகளுக்கு எதிராக ஜோகூர் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைமையத்தின் குற்றப் புலனாய்வுத்துறையின D 7 பிரிவு , ஏப்ரல் 17 ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில் 30 முதல் 34 வயதுடைய மூன்று ஆடவர்கள் மற்றும் 27 வயதுடைய ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
வீட்டின் வாசல் பகுதியில் பெயிண்ட் கொட்டுவது , கதவுகளைப் பூட்டுவது மற்றும் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களை மிரட்டுவது போன்ற துரோகச் செயல்களைச் செய்வதற்காக இந்தக் கும்பலுக்கு 100 ரிங்கிட் முதல் 350 ரிங்கிட்வரை பணம் வழங்கப்பட்டதாகக் போலீஸ் மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நடவடிக்கையில் ஒரு கார், நான்கு கை தொலைபேசிகள் , வண்ணம் பூசிவதற்கான கலம் , சிறிய கத்தி, சாவியுடன் கூடிய சாவிக்கொத்து, பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் அடங்கிய தாள் மற்றும் மிரட்டல் கடிதம் எழுதும் கருவிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குமார் விவரித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியுளளனர் என்பது அவர்களின் சிறுநீரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.