
கோலாலம்பூர், ஜனவரி 22 – கடந்த நான்கு ஆண்டுகளில் கடப்பிதழ் ஊழல் சம்பவங்களுடன் தொடர்புடைய 41 மலேசிய குடிநுழைவு துறை அதிகாரிகள் மீது ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களில் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேடுகள் தொடர்பான அமலாக்க முகமை நேர்மை ஆணையமான EAIC வெளியிட்ட விசாரணை அறிக்கையை குடிநுழைவு துறை கவனத்தில் எடுத்துள்ளதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban கூறினார்.
EAIC முன்வைத்த கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை குடிநுழைவு துறை தீவிரமாக எடுத்துக் கொண்டு, சட்டம், அரசுப் பணியாளர் விதிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள ஒழுக்க விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் EAIC பரிந்துரைத்த 61 வழக்குகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட குழுக்களில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்ல நிர்வாகத்தை உறுதி செய்வதில் குடிநுழைவு துறை மிகவும் உறுதியாக உள்ளது.
அத்துடன், குடிநுழைவு சேவைகளில் SOP கடைப்பிடிப்பை வலுப்படுத்தி, உள் கண்காணிப்பை அதிகரித்து, பொதுமக்களின் நம்பிக்கையையும் நாட்டின் நலனையும் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.



