
கோலாலம்பூர், ஜூன் 26 – கல்லூரி வளாகங்களுக்கு வெளியே மாணவர்களை தங்க வைக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மலேசிய காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சைபர்ஜெயாவிலுள்ள காண்டோமினியம் ஒன்றில் உள்ளூர் பல்கலைக்கழக மாணவி தனது விடுதி அறையில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழகம் அருகிலுள்ள காண்டோமினியம் மாணவர்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.