
கோலாலாம்பூர், ஜூலை-29- ஆலயங்கள் சுயமாக இயங்கும் தளங்களாக உருவாகும் போது சமுதாய மேம்பாட்டுக்கும் அவற்றால் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற முடியும்.
உலு சிலாங்கூர், களும்பாங் அருள்மிகு ஸ்ரீ மகா சிவசக்தி மாரியம்மன் ஆலயம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் பாராட்டினார்.
அவ்வாலயத்திற்கு அண்மையில் தாம் மேற்கொண்ட வருகையின் போது, அதனை நேரில் கண்டதாக அவர் சொன்னார்.
சிலம்ப வகுப்புகள், சமய மற்றும் தேவார வகுப்புகள், சமூகத்தின் ஆன்மீக உணர்வை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை ஆலயம் செய்து வருகிறது.
ஆலய நிர்வாகத்தின் இத்தகையச் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது; சமய – ஆன்மீகக் கடமைகளை செவ்வனே செய்யும் அதே வேளை, சமுதாய மேம்பாட்டுக்கும் பல்வேறு நடவடிக்களை நிர்வாகம் எடுத்து வருகிறது.
சமயக் கடமையோடு சமூகக் கடமைகளையும் சிறப்பாக ஆற்றி வரும் கோயில்களில் ஒன்றாக இந்த சிவசக்தி மாரியம்மன் ஆலயம் விளங்குவதாக அவர் கூறினார்.
ஆலயத் தலைவர் தங்கராஜாவின் அழைப்பின் பேரில் கடந்த ஞாயிறன்று சிவகுமார் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டார்.
களும்பாங் ஸ்ரீ சிவ சக்தி மாரியம்மன் ஆலயம் மஹிமா கட்டமைப்பில் இணைந்ததன் அடையாளமாக ஆலயத் தலைவருக்கு உறுப்பியச் சான்றிதழையும் சிவகுமார் எடுத்து வழங்கினார்.
நாடளாவிய நிலையில் உள்ள இந்து ஆலயங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை இது குறிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்து சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பங்களிக்கும் கோயில்களை மஹிமா தொடர்ந்து ஆதரித்து வருமென்றும் அவர் உத்தரவாதம் வழங்கினார்.