கள்ள நோட்டு பயன்படுத்தியது, தங்க வளையல் திருட முயன்றதாக முன்னாள் தொழிற்நுட்பாளர் மீது குற்றச்சாட்டு

கோலாத் திரெங்கானு, ஜன , 4 – கள்ள நோட்டுக்களை பயன்படுத்தியது மற்றும் தங்க வளையலை திருட முயன்றதாக முன்னாள் தொழிற்நுட்பாளர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்திலும் , மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் தனித்தனியாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. அந்த இரு குற்றச்சாட்டுக்களையும் அந்நபர் ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் மணி 3.10 அளவில் நகைக் கடை ஒன்றில் ஒரே வரிசை எண்ணைக் கொண்ட 359 போலி 50 ரிங்கிட் நோட்டுகளைப் நகைக்கடை ஒன்றில் பயன்படுத்த முயன்றதாக அகமட் பைசால் ஷரானி என்ற 34 வயது ஆடவர் மீது கோலாத் திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் 511 ஆவது பிரிவுடன் சேர்த்து 489ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட அந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நீதிபதி நஸ்லிசா முகமட் நஸ்ரி
( Nazlyza Mohamad Nazri) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு ஜாமின் அனுமதிக்கபடவில்லை. இந்த குற்றத்திற்கான தண்டனை மீதான தீர்ப்பு ஜனவரி 19ஆம் தேதி தெரிவிக்கப்படும்.
இதனிடையே கடந்த டிசம்பர் 25 ஆம்தேதி மதியம் மணி 12.20 அளவில் டுங்குனில் உள்ள நகைக்கடை ஒன்றில் மதியம் மணி 12.20 அளவில் 29,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க வளையலைத் திருட முயன்றதாக அந்த நபர் மீது மாஜிஸ்திரேட் இபா நபினா முகமட் இஷாக்
( Iffah Nabinah Mohd Ishak ) முன்னிலையில் மற்றொரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இக்குற்றச்சாட்டை அந்நபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



