
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கோலாலம்பூரில் உள்ள Sunway Putra Mall பேரங்காடிக்கு அருகே ஆற்றிலிருந்து 36 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17-ஆம் தேதி காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலை, மறுநாள் காலை ஜாலான் ஈப்போவில் உள்ள Rivercity Condominium அருகே ஒருவர் கண்டார்.
ஆற்றின் வலுவான நீரோட்டம் உடலை அடித்துச் சென்றதால், அது பின்னர் சன்வே புத்ரா மால் அருகே மீட்கப்பட்டது.
அப்பெண் சௌகிட் பகுதியில் வசித்து வந்தவர் ஆவார்.
உடல்நல பிரச்னைகள் எதுவும் இல்லாத அவர், தனது காதலன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
உடல், சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குற்றச்செயல் எதுவும் சந்தேகிக்கப்படவில்லை என்பதால், இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



