
கோலாலம்பூர், ஜூன்-28 – மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான தீவிர எண்ணம் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டும் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடியத் தலைவர்களை மக்கள் இனி புறக்கணித்து விடுவார்கள்.
கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ அதனை நினைவூட்டியுள்ளார்.
குறிப்பாக இளையோர்கள் முன்பு போலில்லை; அவர்கள் இப்போது புத்திசாலியாகி விட்டார்கள்.
தங்களுடையத் தேவை என்ன என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.
ஆக அந்த அடிப்படையில் தலைவர்கள் நிச்சயமாக மாற வேண்டும்.
கடந்த காலங்கள் போல், விளம்பரத்திற்காக மேடைகளில் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவதும் டிக் டோக்கில் கவர்ச்சிகரமாக பேசுவதும் இந்த காலத்திற்கு ஒவ்வாது என சார்ல்ஸ் தெரிவித்தார்.
அதே சமயத்தில் ஓர் உதாரணத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்கா நியூ யோர்க்கில் வழக்கமான அடையாள அரசியலைப் புறந்தள்ளி, மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பேசிய 33 வயது இளைஞருக்கு வாக்காளர்கள் அமோக ஆதரவளித்துள்ளனர்.
வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே பேசும் தலைவர்களைக் காட்டிலும், வீட்டுடைமை, சம்பளம், நீதி போன்ற மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளைப் பேசும் வேட்பாளர்களின் பின்னால் தான் இளைஞர்கள் அணித் திரள்கின்றனர் என்பதே இந்த நியூ யோர்க் சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
ஆக மாற்றத்தை நோக்கி தலைவர்கள் பயணிக்க வேண்டுமென சார்ல்ஸ் சாந்தியாகோ வலியுறுத்தினார்