
கோலாலம்பூர், பிப்ரவரி-6-கிளந்தானிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலை, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை முறியடித்துள்ளது.
பஹாங், பெந்தோங், கெந்திங் செம்பா R&R நிலையத்தில் Perodua Myvi காரிலிருந்த 3 உள்ளூர் ஆடவர்கள் கைதானதை அடுத்து, இது சாத்தியமானதாக அத்துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்தார்
அவர்களை துருவி விசாரித்ததில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், கோலாலாம்பூர் ஜாலான் கூச்சாய் லாமாவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த Honda HRV காரில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 255 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 265 கிலோ கிராம் எடையிலான methamphetamine வகை போதைப்பொருள் சிக்கியது.
அவற்றின் மொத்த மதிப்பு 13.25 மில்லியன் ரிங்கிட்டாகும்.
இவ்வேளையில், பிப்ரவரி 2,3-ஆம் தேதிகளில் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 15 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவை, உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதற்காக கடத்தப்பட்டவையாகும்.
இதையடுத்து 3 உள்ளூர் ஆடவர்கள், ஓர் உள்ளூர் பெண், ஒரு வெளிநாட்டு ஆடவர், ஒரு வெளிநாட்டுப் பெண் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர்.



