
கோலாலம்பூர், ஜூன்-5 – விமானம் நிறுத்தப்படுவதற்கு முன்பே, இருக்கை பாதுகாப்பு இடைவார் விளக்கு அணைக்கப்படும் வரை காத்திருக்காமல் எழுந்து நிற்கும் பயணிகளுக்கு, மலேசியா அபராதம் விதிக்கத் தேவையில்லை.
அவ்விஷயத்தில் நாம் துருக்கியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என, மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான CAAM கருதுகிறது.
மலேசியாவுக்குள் நுழையும் பெரும்பாலான பயணிகள் பொதுவாக ஏற்கனவே உள்ள இருக்கை பாதுகாப்பு இடைவார் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
இதுவரை இந்த பிரச்சினை குறித்து புகார்கள் எதுவும் வரவில்லை என அது கூறியது.
இருந்தாலும், விமானம் தரையிறங்கிய பின் முழுமையாக நிற்பதற்கு முன், குறிப்பாக இருக்கை பாதுகாப்பு இடைவார் விளக்கு எரியும் போதெல்லாம், பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருக்க வேண்டுமென அது நினைவூட்டியது.
காயத்தின் அபாயத்தைக் குறைக்கவும், கேபின் பணியாளர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறுகளைத் தடுக்கவும் அது அவசியமாகும் என CAAM சுட்டிக் காட்டியது.
பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியவுடன் இருக்கை பாதுகாப்பு இடைவார் விளக்கு அணைக்கப்படும் வரை காத்திருக்காமல் நிற்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களை துருக்கியின் விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது