
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-30-MBPJ எனப்படும் பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையே, கிளானா ஜெயாவில் நடைபெற்று வரும் ஒரு மாத கால ஒளிக்காட்சி தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், இது அமைக்கப்பட்ட பின்னரே தங்களுக்குத் தெரியவந்தது என்றும் மாநகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின்சாரம் மற்றும் ஒளிக்கருவிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், குறிப்பாகக் குழந்தைகள் வரும் இடத்தில் பாதுகாப்பு முறையாக உறுதிச் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
வரி வசூல் மற்றும் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட விதம் குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளிப்பதாக மன்ற உறுப்பினர் Yip Sean Yi தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த மேயர் டத்தோ Mohamad Zahri Samingon, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது அதை ஒத்திவைப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றார்.
அதோடு, பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கவனிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
என்ற போதிலும் அடுத்த வாரம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்; அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்த ஒளிக்காட்சி வரும் ஜூன் 7 வரை நடைபெறவுள்ளது.



