சுபாங் ஜெயா, மார்ச் 10 – கிள்ளான் ஆற்றில் நீர்க் குழாய்க்கு அருகே மிதந்து கொண்டிருந்த உள்நாட்டைச் சேர்ந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டது. நேற்று காலையில் அந்த சடலம் மீட்கப்பட்டதாக சுபாங் ஜெயா ‘OCPD’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். புக்கிட் தண்டாங் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகே கிள்ளான் ஆற்றின் நீர் குழாய்க்கு அருகே அந்த ஆடவரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர் டீ சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற இடைவார் மற்றும் இடது கையில் கருப்பு கைக்கடிகாரத்தையும் அணிந்திருந்தார். அவரது உடலில் எந்தவொரு அடையாள ஆவணங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
அவரது கன்னத்தில் காயம் மற்றும் இரு கைகளிலும் சிராய்ப்புகள் காணப்பட்டன, அதே போல் இடது விலா எலும்பில் காயங்கள் காணப்பட்டதாக போலீஸ் தடயயியல் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அந்த உடல் காணப்பட்ட இடத்தில் ஆயுதங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு அந்த ஆடவர் திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ACP வான் அஸ்லான் தெரிவித்துள்ளார்.