
கிள்ளான், ஆகஸ்ட்-7 – கிள்ளான், பண்டார் செந்தோசாவில் சக வெளிநாட்டு நண்பரைக் கொன்று குப்பை மேட்டில் புதைத்த சந்தேகத்தில், 2 பெண்கள் உட்பட 7 பேர் கைதாகியுள்ளனர்.
20 முதல் 34 வயதிலான அந்த எழுவரும் கிள்ளான் சுற்று வட்டாரங்களில் கைதானதாக, தென் கிள்ளான் போலீஸ் துணைத் தலைவர் Kamalariffin Aman Shah தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பெண்ணிடமிருந்து ஜூலை 23-ஆம் தேதி கிடைத்த புகாரின் அடிப்படையில் அக்கைது மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 20-ஆம் தேதி Lorong Laksamana சாலையில் உள்ள கடை வீட்டொன்றில் கொலை நடந்ததாகக் கூறி அப்பெண் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து வீசாரணையில் இறங்கிய போலீஸ், ஒரே வீட்டில் தங்கியவர்களால் 28 வயது வெளிநாட்டு ஆடவர் கழுத்திலும் உடம்பிலும் கத்திக் குத்துக்கு இலக்கானதைக் கண்டுபிடித்தது.
குடிபோதையில் வாக்குவாதம் முற்றி கடைசியில் கொலையில் முடிந்திருக்கிறது.
கொலைக்குப் பிறகு அங்கிருந்த 6 ஆடவர்கள் சடலத்தை அப்புறப்படுத்தி, குப்பை மேட்டில் கொண்டு புதைத்தனர்.
34 வயது முதன்மை சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சடலமும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டன.
சந்தேக நபர்கள் அனைவரும் கிள்ளான் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றனர்.